திங்கள், 8 ஏப்ரல், 2013

அடிமையென வாழும் வாழ்வே!

 
பெண்ணாகப் பிறந்து விட்டால்
பெருமையென உள்ம னத்தில்
விண்போன்ற ஆசை வந்தும்
வீணென்று தள்ள வேண்டும்!
பண்ணிற்குள் கருவின் உண்மை
பண்பற்று போகு மென்று
மண்ணாக்கி மனத்திற் குள்ளே
மக்கத்தான் வைக்க வேண்டும்!
மதம்கொண்ட போதை மக்கள்
மயக்கத்தைத் தெளிய வைக்கப்
பதமாகச் சொல்லெ டுத்துப்
பண்ணென்று பின்னி விட்டால்...
இதமாக ஏற்றோம் என்றே
இயம்பிவிட யாரும் இல்லை!
நிதம்காணும் காட்சி நெஞ்சுள்
நினைவாக்கிக் குமுற வேண்டும்!
காண்கின்ற காட்சி எல்லாம்
கனவுகண்ட ஊமை போலே
வீண்என்றே மனத்தில் வைத்து
வெளிவராமல் காத்தல் வேண்டும்!
ஊண்மட்டும் கொண்ட மேனி
உயிர்வாழ உதவ வேண்டி
ஆண்என்ற ஆதிக் கத்தின்
அடிமையென வாழும் வாழ்வே!
அருணா செல்வம்
08.03.2013

கருத்துகள் இல்லை: