சனி, 9 மார்ச், 2013

யுத்தம் இல்லாமல் ஒரு பூமி


அழைத்தாலும் செல்ல மாட்டார்
அழைப்பு ஏதும் விடவும் மாட்டார்
யுத்தம் இல்லாமல் ஒரு பூமி பல
யுகங்கள் கடந்தும் வாழுது பார் சாமி!!!....

காலம் நேரம் பொன்னானது நம்
கடமை ஒன்றே கண்ணானது என
வேலை செய்து பிளைப்பவர்கள்
வீண் விண்ணாணத்தை எதிர்ப்பவர்கள்!...

பாலைப்போல கள்ளும் இல்லை இவர்கள்
பாசம் வைத்தால்  பொல்லாதவர்கள்
ஏழை எளியவர் என்றே பார்க்க மாட்டார் என்றும்
 பழக நல் இதயம்கொண்ட  மானிடர்கள்!!!.......

நாட்டைப் போல நன் மக்களடா நானும்
இதுபோல் வேறெங்கும் கண்டதில்லை!...
சிறு கூட்டுக்குள் எத்தனை இனப் பறவைகள்
இருந்தும் சீராய் இருக்குதே மனித உரிமைகள்!!....


வெட்டுக் கொத்தும் வீண் சண்டையும்
விட்டுக் கொடுத்து வாழாத தன்மையும்
பித்தப் பையில் உறைந்திருந்தால் பின்
பிளைப்பு நடக்கும் அது எவ்வாறு!!!.......

நாம் கற்றுக் கொள்ள பிறரிடத்திலும்
கலந்து கிடக்குது பல நன்மைகளும்
உற்று இதனை உலகம் நோக்கினால்
உயிர் உய்ய வழிகள் நிறையவே  உண்டு!...

சட்டைப் பையில் பணம் இருக்குது
பெரும் சண்டியர் என்ற நினைபிருக்குது
ஒற்றையில் நின்று நான் ஜெயிப்பேன் என்றால்
உன்னைத்  திருத்த முடியாது!......

பூலோக சொர்க்கம் என்றழைக்கும்
புனிதமான நாடு இங்கேயும் பாரு
வாழ வழி தேடி வந்த  கூட்டம்தான் வலிந்து
இழுக்குது எந்நாளும் இதனால் போராட்டம்!....

ஊரைச் சுற்றிக் கடனை  வேண்டி
உருப்படாத பாதையில் தினமும் வீங்கி
ஆளை ஆள் அடித்துக்கொண்டு
அலங்கோலப் படுவதும் எதற்க்காக!....
தூக்குக் கயிறும் பூச்சி மருந்தும்
உயிர் போக்கும் வழிக்கு சிறந்ததென
ஆக்கம் இழந்து புழுப்போல் இங்கும்
அதையே தேடி அலைவதென்ன!.......

நம் நாட்டில் துயரம் பொங்கி வழிய
நம்மவர் படும் துன்பம் மறந்து நீயும்
வீண் பேச்சு வம்பு வழக்கில் இறங்கி
வீதியில் நின்று சண்டை புரிவதும் ஏன்!!!.....

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுவும்
நம் குலத்தில் தோன்றிய பழக்க தோஷம்
மாற்று வழிகள் இதற்குத் தேவை முடிந்தால்
மற்றவரை இகழ்வதை நிறுத்து ...............

கருத்துகள் இல்லை: