புதன், 27 மார்ச், 2013

அவசியம் உங்கள் கவனத்தில்-ஏதிலிகளின் ஏக்கத்தின் வயிற்றில் நஞ்சு வாக்கும் நரிகள் அமைப்புக்கள்-!!!


இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நிலையை யார் அறிவீர்கள்?
புலம் பெயர்ந்த உறவுகளாகிய நீங்கள் இவற்றை அறிவீர்களா?
அல்லது அறிந்தும் அறியாத மாதிரி இருக்கிறீர்களா?
 உதவி என்கிற பெயரில் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில அமைப்புகளின் ஆண் பணியாளர்கள் போரால் பாதிக்கப்பட்ட பெண்களைத் தமது இச்சைகளுக்குப் பயன்படுத்துவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களா?
இத்தகையவர்களுக்குப் பல பெண்கள் பலியாகியிருக்கிற சோகக்கதைகள் தெரியுமா?
பணத்திற்காக….
வாழ்வாதரத்திற்காக…..
உங்கள் வெளிநாட்டுப் பணங்கள் எங்களை வாழ வைக்கும் என்ற நப்பாசையில் உதவிகளை நாடி கடைசியில் பலரது பாலியல் தேவைகளுக்குப் பலியாகின்ற பெண்களைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
ஒரு மனிதன் பிறக்கும் போது எதையுமே கற்றுக் கொண்டு பிறப்பதில்லை.
எம்மை நல்லவராக வளர்ப்பதும் நல்ல அறிவுடன் ஒழுக்கமாக வளர்ப்பது பெற்றோரின் கடமை மட்டுமன்றி சேரும் நபர்கள் சூழல் எல்லாவற்றிலும் தான் தங்கியிருக்கிறது.
மற்றும் நல்ல விடயங்களைத் தேடி அறிந்து படிப்பதிலும் தான் இருக்கிறது.
பணம் என்ற ஒன்றுக்காக உறவு நட்பு எல்லாவற்றிலும் இன்று சுயநலமே மேன்மையாக இருக்கிறது.
கடந்த காலங்களில் புலம் பெயர் உறவுகளாகிய நீங்கள் பாதுகாப்பாக எல்லாச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு போராட்டம் வளர்வதிற்கும் நாங்கள் இருக்கிறோம் என குரல் கொடுத்துத் கொடுத்து வளர்த்தீர்கள்.
உதவிகளைப் பலர் உவந்து வழங்கினீர்கள்.
உங்களில் சிலர் உயிரைக் கூட பணயமாக்கி வெளிநாடுகளில் போராட்டத்திற்காக உழைத்தீர்கள். அதனை நான் இல்லையென்று மறுக்கவில்லை.
ஆனால் இப்போது என்ன நடந்தது.
ஏன் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தீக்குளித்தீர்கள்?
உண்ணாவிரதம் இருந்தீர்கள்?
ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்?
வணங்கா மண் கப்பல் வருகிறது உணவுப் பொருட்கள் வருகிறது என்றெல்லாம் சொல்லி சொல்லிக் குரல் கொடுத்து குழந்தைப் பிள்ளையை ஏமாற்றுவது போல எங்களையும் ஏமாற்றிய போது நாங்கள் இங்கு செல் மழைக்குள் வழ்ந்து கொண்டிருந்தோம்.
கடைசி நேரம் கூட இராணுவத்தினரிடம் சரணடையும் போது உங்களுக்குக் கப்பல் வருது, வெள்ளைக்காரர் வாறாங்கள். குறிப்பிடும் ஆங்கிலேய நிறுவனம்[ICRC, UNHCR ]வந்து பொறுப்பெடுப்பார்கள் என்று சொல்லிச் சொல்லிக் காத்திருந்து காத்திருந்து எத்தனை உறவுகளை இழந்திருக்கிறோம்…..?
தங்களையே கொண்டு நடக்க முடியாத போராளிகளை காயமடைந்து குருதிபெருகத் துடித்தவர்களையெல்லாம் நாய்களைத் தெருவில் போட்டது போல எங்களுக்கு வளிகாட்டியவர்கள் போட்டுவிட்டுத் தாங்கள் தப்பித்தார்கள்.!!
ஊனமடைந்த வர்களையேனும் ஏன் கடைசி நேரத்தில் பாதுகாப்பாக அனுப்ப முடியவில்லை….?
அல்லது பொறுப்பெடுக்க முடியவில்லை….?
இவர்கள் யார்?
நீங்கள் போராடுங்கள் என்று பரணிபாடி எங்களை நெருப்பில் வீழ்த்திவிட்டீர்கள்.
நீங்கள் என்னத்தைத்தான் சர்வதேச அரங்கில் எங்களுக்காகப் போராடித் தந்தீர்களோ?
புரியவில்லை.?
நாங்களும் உங்கள் போல உங்களது பிள்ளைகள் போல எங்களது பெற்றோருடன் வீட்டில் இருந்திருந்தாலோ ..?
அல்லது உங்களைப்போல யுத்தம் நடக்காத பிரதேசத்திற்குள் வாழ்ந்திருந்தால் இந்த நிலை நேர்ந்திருக்குமா?
இப்படித்தான் என்போன்ற முன்னாள் போராளிகள் பலர் எண்ணுகிறோம்.
நடந்தது நடந்து போனதாக இயற்கை தனது இயல்பில் போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் நடந்து முடிந்தவற்றின் சாபமாக நாங்கள் இங்கே அன்றாட வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு மக்களுக்கும் இப்போது நிறையத் தேவைகள் இருக்கிறது.
அன்றாடம் வாழ்க்கையை கொண்டு நடத்தும் சிரமத்தோடு சமூகச்சவால்கள் பலவற்றை நாங்கள் தாங்கவும் தாண்டவும் வேண்டியுள்ளது.
யுத்தம் முடிந்து ஊனங்களும் உறவுகளை இழந்தவர்களும் ஒருபுறம் அவலப்பட வாழ்கின்றவர்கள் ஒரு பெரிய சமூகச் சீர்கேட்டுக்கள் சிக்கியிருப்பதன் பயனாக தந்தையே மகளை வல்லுறவு புரிவதும் பெற்ற தாயே தனது சிசுவைக் கொல்வதும் கணவனை விட்டு மனைவியும் மனைவியை விட்டுக் கணவனும் பிற உறவுச் சேர்க்கையில் ஈடுபடுவதுமென நாறிக்கிடக்கிறது.
நீங்கள் வெளிநாடுகளிலிருந்து கனவுகாணும் உங்களது தாயகம்.
இன்று எமது பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறைமையின் சிலருடைய வாழ்வை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் கதைககளில் சிலவற்றைச் சொல்கிறேன்:-
தடுப்புமுகாமில் கணவர்மார் உள்ள பெண்களின் நிலை:
இவளின் கணவர் தடுப்பு முகாமில், 03 பிள்ளைகள், சின்னப்பிள்ளைகள். இவளுக்கும் 29 வயது தான் சிறிய வயதிலேயே திருமணம் முடித்து வன்னிக்குள் வாழ்ந்து படாத துன்பங்கள் பட்டு வந்தவள்.
சிறிய வயதிலேயே தாயை இழந்தவள்.
தந்தை ஆண் சகோதரன் ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்வை நடத்தப்படும் வறுமையால் இவளைக் கவனிப்பதில்லை.
ஆனால் ..?
அவளது கண்ணியத்தில் சந்தேகம் எல்லோருக்கும். தேவைகளை ஒட்டி எந்த ஆணுடனாவது கதைத்தால் அவன் அவனுடன் வாழ்வதாக சுற்றம் அவளைச் சந்தேகிக்கத் தொடங்கியது.
கணவர் தடுப்பு முகாமில் இவளிடம் போதிய கல்வியறிவும் இல்லை. மூன்று பிள்ளைகளின் கல்விச் செலவு, உணவுச் செலவு உடுப்புப் செலவு கணவனைப் பார்க்கப்போகும் செலவுகள் என்று அன்றாட செலவுகள் இவளுக்கு தலைக்கு மேல் சுமை.
வருமானம் இல்லாமல் எப்படி இவற்றுக்கெல்லாம் செலவு செய்வது?
ஊரில் இவளது தனிமை ஆண்துணையற்ற வாழ்வுபற்றி அதிகமான விமர்சனங்களும் வீண் கதைகளும். தனக்கொரு வேலையைத் தேடிச் செய்ய முயன்றாள்.
அவளது தகைமைக்கேற்ப வேலைகள் எதையும் எவரும் வழங்கவில்லை. சில ஆண்களின் தொடர்புகள் அவளைத்தேடி வரத்தொடங்கியது.
பணத்தைக் காட்டினார்கள்.
அவளது குழந்தைகளுக்கும் அவளுக்கும் வாழத்தேவையான பணத்தை வழங்கியவர்கள் அவளைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
கடைசியில் அவள் அவர்களது பணத்துக்காக அடிமையானாள்.
இன்று கணவன் தடுப்பிலிருந்து வெளியில் வந்துள்ளான்.
தடுப்பிலிருந்து வந்த கணவன் ஒரு முன்னாள் போராளி. அவனால் வேலை செய்யுமளவுக்கு உடல் வலுவில்லை.
களத்தில் நின்று ஊனமடைந்தவன்.
இதனால் அவள் தான் குடும்பத்தைச் சுமக்க வேண்டிய நிலமையில் வேலையென்ற பெயரில் வெளியில் சென்று வருகிறாள்.
தற்போது ஆடைத்தொழிற்சாலைக்குப் போவதற்கான ஒழுங்குகளைச் செய்துள்ளாள்.
தனது பிள்ளைகளை யாரிடமாவது கொடுத்துவிட்டுப் போகத்தயாராக சிறுவர் இல்லங்களைத் தேடித் திரிகிறாள்.
மாதவருமானம் அவளுக்கு எப்படியாவது வந்தால் போதுமென்ற நிலமையில் விபச்சாரம் செய்யக்கூடத் தயாராயிருக்கிறாள்.
வறுமை ஒருத்தியின் வாழ்வை எத்தகைய நிலமைக்கு உட்படுத்தியுள்ளது பாருங்கள் ?
இவளைப்போல் பல பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றி நீங்கள் அறியும் போது கலாச்சாரம் பண்பாடு தமிழினம் என்று குத்தி முறிவீர்கள். ஆனால் யதார்த்தம் இதுதான்.
அண்மையில் ஒரு கட்டம் ஆண்களை விடுதலை செய்வதென்று அறிவித்தார்கள்.
எத்தனை பெண்கள் தங்களின் கணவர்மாரின் வருகைக்காக எதிர்பார்த்திருந்தவர்கள்…?
கடைசியில் ஏமாற்றம் தான்.
இதெல்லாம் யாரால் நடந்தது?
தங்கள் கணவர்கள் வெளியில் வந்து தமக்குச் சுமையாவதைவிட தடுப்பில் இருக்கட்டுமென்றதே பல பெண்களின் விருப்பமாகவுள்ளது.
இதற்கெல்லாம் யார் காரணம்?
நீங்கள் தான்.
புலம்பெயர்ந்து எங்களைப் பலிக்கு விட்டுவிட்டுப் போராட்டம் நடத்தினீர்கள்.
உங்கள் பொழுதுபோக அமைப்புகளை நிறுவி விடுமுறை நாட்களைக் கொண்டாடும் இடமாக ஊர்வலம் போகிறீர்கள்.
உலகம் எங்களை அழிக்காமல் எங்களையும் வாழ வைக்க எப்போது நீங்கள் அரசியல் செய்தீர்கள்.
இளையோரை எழுபதாம் ஆண்டு அரசியல்வாதிகள் உசுப்பிவிட்டு ஆயுதம் ஏந்த வைத்தார்கள்.
இன்றும் அதே பாணிதான் அதே வாய்வீரம் தான் எதுவும் எங்களுக்கென்று இல்லை.
நாங்கள் ஊனங்களானதும் உயிர்களை இழந்ததும் தான் கண்ட மிச்சம்.
வேலை தருகிறோம் என்று பலர் கொழும்புக்கு அழைத்து செல்கிறார்கள்.
அது எது என்று பார்த்தால் விபச்சார விடுதிகள் ஆக உள்ளது.
இவற்றைச் செய்வது கூட தமிழ் ஆடவர்கள் தான்.
உங்கள் உதவிகள் சரியாக எங்களுக்குக் கிடைக்கிறதா என்பதனை முதலில் சரிபாருங்கள்.
உதவிகள் சிதறாமல் எல்லாரும் ஒற்றைமையாக இணைந்து உதவி புரிவீர்களாக இருந்தால் எத்தனை பேரை வளர்த்திடலாம்.
எத்தனை பேருக்கு நிம்மதி கிடைக்கும்.
உண்மையிலே இப்போ எங்கள் மக்கள் நன்றாகவே உழைக்கிறார்கள்.
எப்படியென்று கேட்கிறீர்களா?
எங்கள் மக்களே எங்கள் மக்களை ஏமாற்றியும் உதவி செய்கிறோம் என்று வெளிநாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்திப் பொய்யான பெயர்கள் சொல்லியும் வெளி நாட்டுப்பயண போக்குவரத்து நிறுவனங்கள் என்று சொல்லும் வேலை செய்தும்,
சமுகச்சீரழிவுச் செயல்களிலும் இறங்கிப் பிழைக்கிறார்கள்.
இது உங்களுக்கு தெரியுமா?
இதற்கும் கூட நீங்களும் தான் காரணமாக இருக்கிறீங்கள்.
உங்கட பணம் தான் செலவாகிறது.
உண்மையிலே உழைத்து மக்களுக்காக நீங்கள் அனுப்பும் பணத்தை இங்கு பலர் தாங்கள் வாழவே பயன்படுத்துகிறார்கள்.!!!

கருத்துகள் இல்லை: