என்னை
நல்லவள் என்று
என்னால்
நிருபவித்து காட்ட
முடியவில்லை
ஏனென்றால்!
என்னை
கெட்டவளென்று
ஏற்கனவே சிலர்
கரும்புள்ளி
குத்திவிட்டார்கள்...
என்னை
நல்லவளென்று நான்
யாரிடமும்
நிரூபித்து காட்ட
விரும்பவில்லை
ஏனென்றால்! - அதில்
என் சுயநலம்
என்னை பார்த்து
ஏளனமாய் சிரிக்கின்றது...
நான் யாருக்காகவும்
என்னை
மாற்றிக்கொள்ள விரும்பவில்லை
ஏனென்றால்!
எனது படைப்பும்
எனது துடிப்பும்
எனது சந்தோசம்
எனது வேதனை
எனக்கு மட்டுமே
சொந்தமான
எனது சொத்து...

யாரும் என்னை
நம்ப வேண்டாம்
ஏனென்றால்!
மற்றவர்கள்
நம்புகிற அளவிற்கு
நான் நல்லவளும் அல்ல
நம்பிக்கை
துரோகியுமல்ல...
யாரும் என்னிடம்
நெருங்கி பழகாதீர்கள்
ஏனென்றால்!
பிறகு
இன்னல் படுவீர்கள்
இவளைவிட்டு
விலக முடியவில்லையே என்று
அல்லது
இவள் நம்மைவிட்டு
விலகாமல்
இருக்கிறாளே என்று...
எனக்காக யாரும்
வருத்தப்படவோ
இரக்கப்பட வேண்டாம்
ஏனென்றால்!
இரக்கபடுவதால் நான்
இரங்கி போகிறவளும் அல்ல
வருத்தபடுவதால் நான்
வளைந்து கொடுப்பவளும் அல்ல...
உங்கள்
இரக்கமும் வருத்தமும்
என்னை
தாழ்வு மனப்பான்மையில்
தள்ளாமல் இருந்தால் போதும்...
என்மீது யாரும்
உண்மையான அன்பு
செலுத்த வேண்டாம்
போலியான அன்பு
செலுத்தாமல்
இருந்தால் போதும்
ஏனென்றால்!
போலியான அன்பில்கூட
கரைந்துபோய்விடுபவள் நான்...
நான் யாருக்கும்
நன்மைகள் செய்ததில்லை
நான் செய்த தீமைகளை
காரணம் காட்டி - என்னை
தீயவள் என்று
சொன்னவர்களும்கூட தீயவர்களே...
ஆனாலும்
போலியான நல்லவர்களில்
நானும் ஒருத்தி
என்றே தோன்றுகின்றது...
நானும் ஒரு
ஏமாத்துகாரி தான்
ஆனாலும்
சில உண்மையானவர்கள்
என்னை
ஏமாற்றும்பொழுது - அதை
ஏமாற்றமாய் நான்
நினைப்பதில்லை...
ஏனென்றால்!
உண்மையானவர்களுக்கு
ஏமாற்ற தெரியாது
அப்படியே
அவர்கள் ஏமாற்றினாலும்
அதில் ஆபத்து இருக்காது...
எனக்காக யாரும்
காத்திருக்க வேண்டியதில்லை
ஏனென்றால்!
நான் சிலருக்காக
காத்துகொண்டு இருக்கின்றேன்...
காத்திருப்பவனுக்காக
காத்திருப்பது முறையல்ல!
காலத்தை சாகடிப்பது
சாதனையுமல்ல...
என்னைப்போல்
ஒரு கெட்டவளை - நான்
இதுவரை பார்த்ததே இல்லை!
யாருக்கும் தெரியாமல்
என்னை நான்
மறைத்து வைத்திருக்கின்றேன்...
பாவம்
பலபேர் நம்பிவிட்டார்கள்
என்னை நல்லவளென்று - அதனால்தான்
நம்பியவர்களுகாகவாவது
நம்பிக்கை துரோகம்
செய்யாமல் இருக்க
முயற்ச்சிக்கின்றேன்...
குட்டையை குழப்பி
பலமுறை
பருந்துகளிடம் விட்டுருக்கின்றேன்!
அய்யோ பாவம்
மீனென்று நானதை
விட்டுவிட்டாலும்
பருந்துகளுக்கு இரக்கமில்லை...
பாவம்
பருந்துகள்!
இப்பொழுதெல்லாம் நான்
குட்டையில்
இறங்குவதே இல்லை...
நான்
அரிச்சந்திரனுக்கு
பக்கத்து
வீட்டுக்காரியும் அல்ல!
அவருக்கு
எதிர்வீட்டுகாரியும் அல்ல...
அவருக்கு
பொய் சொல்லவே தெரியாது
ஆனால்
உண்மையும் பொய்யும்
இல்லாமல்
வாழவே முடியாது...
''பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்து
நன்மை பெயக்கு மெனின்''
நான் கர்ணனை போல்
வல்லளல்ல
கஞ்ச கருமிகளில்
நானும் ஒருத்தி என்று
கைகாட்டி சொல்லலாம்...
கைகாட்டி சொல்பவர்கள்கூட
வள்ளலாய்
இருக்கவேண்டிய அவசியமில்லை...
கையிருந்தால் போதும்
கஞ்சனே காஞ்சனை
கஞ்சனென்று சுட்டி காட்டுதல்
ஒன்றும் குற்றமல்ல...
''சிக்கனம் வீட்டை காக்கும்
சேமிப்பு நாட்டை காக்கும்''
அக்கறைக்கு இக்கரை பச்சை
என்றென்னி அலைந்து அலைந்து
கடைசிவரை மேயாமல்
பசியோடு வீடு திரும்பும்
மாடுகளைப்போல
நானுமொருத்தி!
என்னுடனான உங்கள் உறவு
நன்றாகவா இருக்கும்...?
என்னை நல்லவளா?
கெட்டவளா? என்று
நீங்கள் கேட்டது
படிப்பறிவு
இல்லாதவனை பார்த்து
பதிலில்லா கேள்வியை
கேட்டதாகவே தோன்றுகின்றது...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒரு மிருகமுண்டு
ஒவ்வொரு வினைக்கும்
ஒரு எதிர்வினை உண்டு - நான்
நல்லவளா? கெட்டவளா? என்று
நான் முடிவு செய்வது
முறையல்ல - அதை
மற்றவர்கள்தான்
முடிவு செய்ய வேண்டும்...
இனி என்னிடம் கேட்காதீர்கள்
நீ நல்லவளா? கெட்டவளா? என்று
இரண்டுமே இல்லை
என்று மட்டும்தான்
என்னால் சொல்ல முடியும்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக